ஓ.பன்னீர்செல்வம் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - ஜெயக்குமார் பேட்டி


ஓ.பன்னீர்செல்வம் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2024 11:44 AM GMT (Updated: 14 March 2024 11:54 AM GMT)

எங்கள் மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஜாபர் சாதிக்கை போல தமிழகத்தில் மேலும் பலரின் முகத்தை மறைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் நாள் விரைவில் வரும். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வந்த நிலையில், இதுவரை விளக்கம் அளிக்காமல் அவர் மீதே அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. செய்த ஒரே வேலை எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்தது தான். முதல்-அமைச்சர் தொடர்ந்துள்ள வழக்கை நிச்சயம் எதிர்கொள்வோம்; எங்கள் (அ.தி.மு.க.) மீது எத்தனை வழக்கு போட்டாலும் அதை எதிர்கொள்வோம்.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. விரைவில் உறுதியான கூட்டணி அமையும். கட்சிக்கு தொடர்பில்லாதவர் ஓ.பன்னீர்செல்வம். சின்னம் குறித்து அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story