மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கான சோதனை நிறைவு - ஆகஸ்டு மாதம் பணி தொடங்குவதாக அதிகாரிகள் தகவல்


மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் எந்திரத்திற்கான சோதனை நிறைவு - ஆகஸ்டு மாதம் பணி தொடங்குவதாக அதிகாரிகள் தகவல்
x

மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயிலுக்காக சுரங்கம் தோண்டும் எந்திரம் தொழிற்சாலை சோதனை நிறைவு செய்யப்பட்டு பணி நடக்கும் பகுதிக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சென்னை

விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பு தேவையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் நீளத்தில் 119 மெட்ரோ ரெயில்நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 4-வது வழித்தடமான கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கிலோமீட்டர்) நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சுமார் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. மேல் மற்றும் கீழ் சுரங்கங்கள் இரண்டையும் கருத்தில்கொண்டு சுமார் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தவுள்ளன.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஐ.றி.டி சிமெண்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பயன்படுத்தப்படும் இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம், சுரங்கம் தோண்டும் எந்திரங்களை தயாரிப்பதில் முன்னோடியான ஹெரென்கனெக்ட் என்ற ஜெர்மன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. 4-வது வழித்தடத்தில் 3-வது சுரங்கம் தோண்டும் எந்திரத்தை தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனையானது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா, அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள எச்.கே. தொழிற்சாலையில் பொது ஆலோசகர்கள் அயோன் கன்சோர்டியத்தின் பல்வேறு அலுவலர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பெயர் பிளமிங்கோ (பூ நாரை பறவை). இது 6.670 மீட்டர் துளை விட்டம் மற்றும் 110 மீட்டர் நீளமுள்ள பூமி அழுத்த சமநிலை எந்திரமாகும். இந்த எந்திரத்தின் மொத்த எடை 700 மெட்ரிக் டன். இது இப்போது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சுரங்கம் தோண்டும் எந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் நடைபெற்று வருகிறது, வருகிற ஆகஸ்டு மாதத்தில் இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் செலுத்துவதற்கு ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் 4-வது வழித்தடத்தில் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ ரெயில்நிலையம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக வருகிற 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் போட் கிளப் பகுதியை வந்தடையும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story