எண்ணெய் கசிவு பாதிப்பு: நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


எண்ணெய் கசிவு பாதிப்பு: நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

மீனவ கிராமங்களுக்கு அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிக்ஜம் புயலின்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய், வெள்ளநீர் கழிவுகளுடன் கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா 7,500/- ரூபாய் நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 12,500/- ரூபாயும், படகுகளைச் சரிசெய்ய படகு ஒன்றுக்கு 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மீண்டும் மீன்பிடித்தொழில் செய்வதற்கு ஏதுவாக, தற்போதுள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு படகிற்கும் நிவாரணமாக 50,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு 30,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 20,000/- ரூபாயும், மீன்பிடி வலைக்கு 25,000/- ரூபாயும் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், 20 நாட்கள் மீன்பிடித்தொழிலுக்கு செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தற்போது அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள, பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களையும் கண்டறிந்து, அந்த மீனவ கிராமங்களுக்கு அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story