பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்


பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்
x
தினத்தந்தி 18 Oct 2023 3:16 AM GMT (Updated: 18 Oct 2023 6:17 AM GMT)

ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சென்னை,

ஓலா, உபேர் போன்ற செயலியை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடைசெய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள் அறிவித்து இருந்தனர்.

இதில் நேற்று முன்தினம் அவர்கள் சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஓட்டுநர்கள் தங்களது போனில் இருந்து செயலியை நீக்கி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரை,திருச்சி, கோவையிலும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என்று ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் செயலியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் குறைந்த அளவிலான ஓட்டுனர்களே வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே கட்டணம் அதிகளவில் உயர்ந்துள்ளது.

சென்னையில் போராட்டத்திற்கு முன் 20 கி.மீ தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டணம் மேலும் அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 2 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.


Next Story