சேலம் அருகே ஆம்னி பஸ்-வேன் நேருக்குநேர் மோதல்: 6 பேர் பலி


சேலம் அருகே ஆம்னி பஸ்-வேன் நேருக்குநேர் மோதல்:  6 பேர் பலி
x

ஆத்தூர் அருகே ஆம்னி பஸ்-வேன் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் தாய், மகள் உள்பட 6 பேர் பலியாகினர். துக்க வீட்டுக்கு வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

துக்க வீட்டுக்கு

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினமே அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.

ஆறுமுகத்தின் வீட்டில் தூங்குவதற்கும், அமர்வதற்கும் போதிய இடவசதி இல்லாததால் பலர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்தனர். அப்போது துக்க வீட்டுக்கு வந்த 11 பேர் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் ஒரு வேனில் டீ குடிப்பதற்காக ஆத்தூர் புறவழிச்சாலைக்கு சென்றனர். வேனை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி. காலனியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

உடல் நசுங்கி பலி

வேன் ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமம் ஒட்டம்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் வேனும், ஆம்னி பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதின. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஷ், அவரது தங்கை ரம்யா (25) மற்றும் புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்த மயில்வாகனன் மகள் சந்தியா (23), சுதாகர் மனைவி சரண்யா (23), சந்தோஷ்குமார் மனைவி சுகன்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

11 வயது சிறுமியும் சாவு

மேலும் படுகாயம் அடைந்து வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அபயகுரல் எழுப்பினர். இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் வேனுக்குள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் சந்தோஷ்குமார் மகள் தன்ஷிகா என்ற 11 வயது சிறுமியும் பரிதாபமாக இறந்தாள். இதன் மூலம் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்த சுதா (36), பெரியண்ணன் (38), புவனேஸ்வரி (17), கிருஷ்ணவேணி (45), உதயகுமார் (17) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பவ இடத்தில் பலியான 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறுமி தன்ஷிகாவின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது கலெக்டர், சாலை தடுப்புகளை மேலும் அதிகரிக்கவும், சாலை விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகளை அதிகளவில் வைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

டிரைவர் தப்பி ஓட்டம்

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து ஆம்னி பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story