75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்ற கார் பேரணி


75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்ற கார் பேரணி
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் பெண்கள் பங்கேற்று நடத்திய கார் பேரணி, நகரின் முக்கிய சாலைகளை உற்சாகப்படுத்தி சென்றது.

பெண்கள் கார் பேரணி

ஒவ்வொரு ஆண்டும் ஒரு சமூக கருத்தை முன்னிலைப்படுத்தி இந்தியன் ஆயில், சவேரா ஓட்டல் டச்சஸ் கிளப் சார்பில் பெண்கள் பங்கேற்கும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, 'சுதந்திரம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கார் பேரணி அரங்கேறியது.

சென்னை மயிலாப்பூர் சவேரா ஓட்டல் வளாகத்தில் 21-வது பெண்கள் கார் பேரணியை சவேரா ஓட்டல் நிர்வாக இயக்குனர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் சைலேந்திரா, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி அமித் அரோரா ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சுமார் 60 கி.மீ. தூரம் எல்லை கொண்ட இந்த பேரணி சவேரா ஓட்டலில் தொடங்கி ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு பகுதிகளை கடந்து மீண்டும் சவேரா ஓட்டலை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடும்பமாக பங்கேற்பு

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம்பெற்றனர். பெண்கள்தான் காரை ஓட்டினார்கள். ஒருவர் காரை ஓட்ட, ஒருவர் வழிகாட்ட, மற்ற 2 பேர் காரிலேயே வினாடி வினா போட்டியில் கலந்துகொள்ள என பேரணி விறுவிறுப்பாக நகர்ந்தது. மற்ற கார் பேரணிகளை விட இந்த கார் பேரணிக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

அதாவது அனைத்து கார்களும் சமமான வேகத்திலேயே சாலைகளில் பயணித்தன.

'புதிய அனுபவம்'

பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் கூறுகையில், ''நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த பேரணியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்ட இதுபோன்ற கார் பேரணி பெண்களுக்கு உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் தருகிறது. இது நல்ல நினைவுகளும் கூட...'', என்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த கார் பேரணி மதியம் நிறைவடைந்தது. பேரணியில் முதல் 3 இடங்கள் பெற்ற கார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


Next Story