கோவை தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும்: அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்


கோவை தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும்: அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 18 March 2024 6:34 AM GMT (Updated: 18 March 2024 12:15 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று 3- வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.

கோவை,

கோவையில் இன்று நடைபெறும் பா.ஜ.க.வின் வாகன பேரணியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதையொட்டி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் கோவையில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை வருகை தந்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் கூறியதாவது:-

"கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் நாளை நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது பா.ஜ.க.வினர் மேலும் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது. மக்களவை. தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று 3- வது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். கூட்டணி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் உறுதியாகும். கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி" என்றார்.


Next Story