நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி - செயற்குழுவில் அதிரடி தீர்மானம்


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி - செயற்குழுவில் அதிரடி தீர்மானம்
x

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒபுதல் வழங்க அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் உள்ளடக்கிய 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:-

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்தது. அதிமுகவின் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 3-வது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்ற தேர்தலின்போது திமுக அரசு அறிவித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என பல்வேறு தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த முழு விவரம்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் மாநாட்டை நடத்துதல் !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பிக்கும் பணியிலும்; புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் பணியிலும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முனைப்போடு |ஈடுபட சூளுரை !

நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகளை விரைந்து அமைத்தல் !

திமுக ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் IT Wing நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மீது, விடியா அரசால் தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு வருவதற்குக் கடும் கண்டனம் !

கழகத்தின் சார்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கும் மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

விடியா திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தல் ! உடனடியாக

விடியா திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை முதலான சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்

தமிழ் நாட்டின் கடன் சுமையைக் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்து, கடன் அளவை குறைக்காமல்; மேலும் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை அதிகப்படுத்தி உள்ள விடியா திமுக அரசுக்குக் கடும் கண்டனம் !

விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள விடியா திமுக அரசுக்குக் கடும் கண்டனம் !

தீய சக்தி திமுக-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கழகத்திற்கு துரோகம் இழைத்து வருபவர்களுக்கு, கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒன்றிணைந்து, தக்க பாடம் புகட்டிட, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சூளுரை !

அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியின் போது, மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட, மத்திய அரசுக்கு அழுத்தம் தர, விடியா திமுக அரசை வலியுறுத்தல் !

சட்டமன்ற மரபுகளை, ஜனநாயக மாண்புகளை சீரழிக்கும் விடியா திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள் !

இளம் தலைமுறையினரை சீரழிக்கும் நோக்கத்தில், தமிழ் நாட்டில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

வரவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும்; அதற்கடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் தீவிர களப்பணி ஆற்றி, கழகத்தின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வீரசபதம் ஏற்போம்!

1 More update

Next Story