வரலாற்று சாதனையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


வரலாற்று சாதனையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 57 ஆயிரம் பேர் பயணித்து வந்துள்ளனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்து உள்ளன. கடந்த மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த விமானங்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 17 லட்சத்து 61 ஆயிரத்து 426 பேர் பயணித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது. ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 விமானங்களில் சராசரியாக 56 ஆயிரத்து 822 பயணிகள் பயணித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 392 விமானங்களில் 55 ஆயிரத்து 565 பயணிகள் பயணித்து உள்ளனர். டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முதன் முறையாக ஜனவரி மாதத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்தது சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story