கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்


கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:45 PM GMT)

வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

இறவை பாசன திட்டம்

நாகை மாவட்டம் தகட்டூர் ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் இறவை பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பலமுறை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பான பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காந்தி ஜெயந்தியையொட்டி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொள்வோம் என விவசாயிகள், கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

கருப்பு சின்னம்

அதன்படி நேற்று, தகட்டூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததையும், வாய்கால்கள் தூர்வாராததையும் கண்டித்து விவசாயிகள், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கோஷங்கள் எழுப்பினர்

பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story