உவரி அருகே முதியவர் வெட்டி கொலை; தம்பி மகன் கைது


உவரி அருகே முதியவர் வெட்டி கொலை; தம்பி மகன் கைது
x

கைது செய்யப்பட்ட பாக்கியராஜ்

உவரி அருகே முதியவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி மகனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள ராமன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்ற கணேசன் (வயது 70) ராமன் குடியில் உள்ள இவருக்கு பூர்வீகமான இடத்தில் மகளுடன் வசித்து வந்தார். இவரது உடன்பிறந்த தம்பி மகன் நாகலிங்கம் என்ற பாக்கியராஜ் (35). இவர் சாத்தான்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ராமன்குடி வந்த பாக்கியராஜ் தனது பெரியப்பாவிடம் தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கணேசனின் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கணேசன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, பாக்கியராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story