ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது


ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
x

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மதுரை,

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதால் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 17 ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு 800 பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சியால் நேற்று அதிகாலை வரை நடந்த மீட்பு பணியில், சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் 4 பஸ்கள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து கனமழை பெய்த வண்ணம் இருந்ததாலும், ரெயில் நிலையத்தை தண்ணீர் கடுமையாக சூழ்ந்ததாலும் எஞ்சிய 500 பயணிகளை மீட்க முடியாத நிலை உருவானது.

தொடர்ந்து 3 நாட்களாக ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி நேற்று காலை தொடங்கியது. முதலில் கர்ப்பிணி பெண், ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேரை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மதுரைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் ரெயில் நிலையத்தில் சிக்கி, நேற்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் அனுசுயா ( வயது 27) என்பவருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story