போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை

சென்னை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு முனாப், போலீஸ்காரர்கள் பவுன்ராஜ், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் போலீஸ்காரர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'இந்த வழக்கில் 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பெறப்பட்டுள்ளது. தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மனுதாரர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்று வாதாடினார். விசாரணை முடிவில், 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story