வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை 14 முறை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி


வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம்: கள்ளக்காதலியை 14 முறை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி
x

அரூர் அருகே வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேரேரிப்புதூரை அடுத்த தேக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜெயமணி (38) என்ற முதல் மனைவியும், செல்வி என்ற 2-வது மனைவியும் இருந்தனர். இந்த நிலையில் ஜெயமணிக்கும், பாறைவளவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ராஜாராம் ஜெயமணியை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயமணி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தபோது வனச்சாலை பெரிய மேடு பகுதியில் ஜெயமணி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஜெயமணி வேறு சிலருடன் பேசியதாகவும், அதனால் மனோகரனுக்கு ஜெயமணி மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ஜெயமணியை பார்த்து பேசிய மனோகரன் இது தொடர்பாக ஜெயமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மனோகரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயமணியை 14 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story