மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரியவகை குரங்குகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை


மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரியவகை குரங்குகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
x

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய அரிய வகை குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர்களிடம் இருந்த கூடையில் உயிருள்ள பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த கூடையை திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரியவகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பயணிகளிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் வீட்டில் வளர்க்க எடுத்து வந்திருக்கிறோம் என்று கூறினர்.

ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவையும் அவர்களிடம் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

ஆனால் இதில் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளையும் சுங்க இலாகா பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் அவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story