கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி


கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலி
x

கனகம்மாசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகன் பிரேம்குமார் (வயது 40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பிரேம்குமார் தற்போது சென்னையில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் திருத்தணிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் நெடும்பரம் பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான சந்திரகலா என்பவரை ஏற்றிக்கொண்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே நடந்து சென்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேம்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சந்திரகலா, அடையாளம் தெரியாத முதியவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


Next Story