செந்தில் பாலாஜி நீக்கம்: தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா கவர்னர்? - திருமாவளவன்


செந்தில் பாலாஜி நீக்கம்: தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா கவர்னர்? - திருமாவளவன்
x

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கவர்னர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும்.

ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன்மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க் கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும்" என்று கூறியுள்ளார்.



Next Story