சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
x
தினத்தந்தி 1 Feb 2024 11:31 AM GMT (Updated: 1 Feb 2024 11:49 AM GMT)

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை, சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதமானதாக சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மாஜிஸ்திரேட், பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை நடத்தினால் அவர் தனது பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.


Next Story