ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்


ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Sep 2023 8:25 PM GMT (Updated: 25 Sep 2023 10:23 PM GMT)

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பான ஒருவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.1½ லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பான ஒருவரை கைது செய்தனர்.

தேக்கு, சந்தன மரங்கள் வளர்ப்பு

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவிரி, கொள்ளிடம், அரசலாறு, மண்ணியாறு, குடமுருட்டி, திருமலைராஜன் ஆறு

உள்ளிட்ட ஆற்றங்கரையோரங்களில் வனத்துறை சார்பில் உயர்வகை தேக்குமரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆற்றங்கரையோர தனியார் நிலங்களில் தேக்குமரங்களுடன், சந்தனமரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான தேக்குமரங்கள் அடிக்கடி வெட்டி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன.

ரோந்து பணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமானுஜபுறம் பகுதியில் தனியார் நிலத்தில் வளர்க்கப்பட்ட 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் பஸ்நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலைய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் சூட்கேசுடன் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த சூட்கேசில் சோதனை செய்தனர். அந்த சூட்கேட்சில் சந்தன மரக்கட்டைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

சென்னைக்கு கடத்தல்

இதையடுத்து புறக்காவல் நிலைய போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பொன்னுசாமி, வனவர்கள் இளங்கோவன், மதன்ராஜ், வனக்காப்பாளர் வித்யா உள்ளிட்ட வனக்குழுவினர், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் (வயது 65) என்பதும், இவர் அய்யம்பேட்டை அருகில் உள்ள இலுப்பக்கோரை, ஒத்தவீடு கிராமத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டி சூட்கேசில் மறைத்து வைத்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

ரூ.1½ லட்சம் சந்தனமரக்கட்டைகள் பறிமுதல்

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், ராம்குமார் வைத்திருந்த 31 கிலோ சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story