வெளியே வந்தால் தடயங்களை அழித்துவிடுவார் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை - அண்ணாமலை பேட்டி


வெளியே வந்தால் தடயங்களை அழித்துவிடுவார் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை - அண்ணாமலை பேட்டி
x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இனி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுப்பது குற்றப்பத்திரிகை ஆவணங்களின் அடிப்படையில்தான்.

ஏனெனில் அதே அடிப்படையில்தான் டெல்லி மந்திரிகளும் சிறையில் இருக்கிறார்கள். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியில் வந்தால் பணப்பரிவர்த்தனைகள் குறித்த தடயங்களை அழித்து விடுவார். எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான்.

மத்திய அரசு கியாஸ் விலையை குறைத்திருப்பதை அரசியல் என்கிறார்கள். கடந்த தீபாவளிக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 மத்திய அரசு குறைத்தது. எல்லா காலகட்டங்களிலும் மத்திய அரசு தேவையானவற்றுக்கு தேவையான நேரங்களில் மானியங்களை வழங்கித் தான் வருகிறது. இப்போதும் யூரியாவுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.2 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

தி.மு.க.தான் தேர்தலுக்கு முன்பு கியாஸ் விலையை ரூ.100 குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. இது தான் அரசியல்.

கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா அரசு மீது ரபேல் போர் விமான ஊழல் என்று காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எப்படிப்பட்ட தோல்வியை மக்கள் வழங்கினார்கள் என்பதை நாடே பார்த்தது. இப்போதும் சி.ஏ.ஜி. அறிக்கையை மேற்கோள்காட்டி தி.மு.க. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசை போல் படுதோல்வியை சந்திக்கும்.

சி.ஏ.ஜி. அறிக்கையில் எந்த இடத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படவில்லை. சில திட்டங்களை மாற்றி அமைத்ததன் மூலம் செலவினங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. சென்னை-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு இந்தியாவிலேயே அதிகமான செலவு ஆகிறது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரியாமலேயே குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

நான் தென் மாவட்டங்களில் 41 தொகுதிகளில் நடைபயணம் சென்றிருக்கிறேன். தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் கோபம் வெளிப்படும். விஸ்வகர்மா திட்டத்தில் ரூ.13 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இதை கி.வீரமணி போன்றவர்கள் தவறாக பேசி வருகின்றனர்.

அப்படியானால் விஸ்வகர்மா திட்டத்தை நிறுத்திவிட்டு, தமிழக அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டியது தானே. கொடுப்பதை கூட தடுக்கும் மனம் படைத்தவர்கள்தான் இந்த திராவிட மாடல் கட்சியினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story