படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது


படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
x

படப்பை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

படப்பை அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையிலான போலீசார் படப்பை பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் இருந்து ஒரகடம் நோக்கி வேகமாக சென்ற மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அந்த வாகனத்தில் 3½ டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை செய்ததில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணபதிபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் (வயது 24), தியாகு (26) ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசி படப்பை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து கடத்திவரப்பட்டதா? அல்லது வேறு பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டதா? எங்கே கடத்தி செல்லப்பட இருந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story