இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர் - தமிழக அரசு தகவல்


இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர் - தமிழக அரசு தகவல்
x

இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

இஸ்ரேலில் இருந்து இதுவரை 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில், இதுவரை இரண்டு கட்டங்களாக புது டெல்லி வந்த 49 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்களில் புது டெல்லி வந்தடைந்த 49 தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசினால் விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 9 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், 8 தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்களால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுவரை, இந்நேர்வில் இஸ்ரேலில் இருந்து 98 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story