புளியங்குடி: முதியவர் கழுத்தை அறுத்து கொலை.. சொத்துக்காக மகனே தந்தையைக் கொன்றது அம்பலம்..!


புளியங்குடி: முதியவர் கழுத்தை அறுத்து கொலை.. சொத்துக்காக மகனே தந்தையைக் கொன்றது அம்பலம்..!
x

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமம் கீழவடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா என்ற பழைய கருப்பையா (வயது 62). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும் மற்றும் மாடத்தி, முருகேஸ்வரி என்ற 2 மகள்களும், முத்துகுமார் என்ற மகனும் உள்ளனர்.

மகள்கள் இருவருக்கும் திருமணமாகிய நிலையில் மகன் முத்துகுமாருக்கு திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 15 வருடங்களாக கருப்பையா தனியாக வசித்து வருகிறார்.

மனைவி காளியம்மாள், மகன் முத்துக்குமாருடன் இலவங்குளத்தில் வசித்து வருகிறார். மகள் மாடத்தி, திருமணமாகி சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார். மாடத்தி தான் தினமும் தந்தைக்கு காலை, மதியம் உணவு வழங்கி பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6-ம்தேதி கருப்பையா தனது வீட்டில் இரவு பத்துமணி வரை வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். 7-ம் தேதி காலை வெகு நேரம் கதவு திறக்காததால் அருகிலுள்ள உறவினர்கள் கதவை தட்டியபோது உள்ளே கருப்பையா அரிவாளால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்..

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கருப்பையாவுக்கும் அவரது மகன் முத்துக்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும். இது சம்பந்தமாக ஒரு வருடத்திற்கு முன்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும் தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணை செய்ததில் தனக்கு சொத்து தர மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டியதாக குற்றத்தை ஒப்பு கொண்டார்.

முத்துக்குமாரிடம் இருந்து அருவாள் மற்றும், ரத்தம் படிந்த டிசர்ட் ஆகியவற்றை போலிசார் கைப்பற்றி, அவரை போலீசார் கைது செய்தனர். கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் குற்றவாளியை தகுந்த ஆதாரத்தோடு கைது செய்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன்,எஸ்ஐ பரத்லிங்கம் ,தனிபிரிவு காவலர் மருது பாண்டி மற்றும் குற்ற பிரிவு போலீசாரை எஸ்பி கிருஷ்ணராஜ், டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.


Next Story