ஓடுபாதையில் இருந்து நடைமேடைக்கு விமானங்கள் செல்ல சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி


ஓடுபாதையில் இருந்து நடைமேடைக்கு விமானங்கள் செல்ல சென்னை விமான நிலையத்தில் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி
x

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து விமானங்கள் நடைமேடைக்கு செல்ல வசதியாக அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மோசமான வானிலை ஏற்பட்டாலும் விமான சேவையில் தாமதம் ஏற்படாது.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துவதற்கான நடைமேடைகள் நூற்றுக்கும் மேற்பட்டவைகள் உள்ளன. தற்போது 95 நடைமேடைகள் விமானங்கள் வந்து, செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடுபாதையில் இருந்து 'டாக்ஸி வே' இணைப்பு சாலை வழியாக நடைமேடைக்கு வந்து நிற்கும்.

விமானங்கள் அவ்வாறு நடைமேடைக்கு வந்து நிற்பதற்கு சென்னை விமான நிலைய தரைதள ஊழியர்கள் தங்கள் கைகளில் சிக்னல் பலகைகளை வைத்துக்கொண்டு சைகை காட்ட, விமானத்தில் உள்ள விமானி அதற்கு தகுந்தாற்போல் விமானத்தை இயக்கி வந்து நிறுத்திவந்தனர்.

ஆனால் கடுமையான சூறைக்காற்று, மழை காலங்கள் போன்ற மோசமான வானிலை நிலவும்போது தரைதள ஊழியர்கள் கைகளால் காட்டும் சைகைகளை விமானிகள் பார்த்து விமானங்களை சரியாக கொண்டு வந்து நிறுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து மேலை நாடுகளில் உள்ளதுபோல் அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகளை சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதியில் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக சென்னை விமான நிலையத்தில் 50 அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக அந்த கருவிகளின் செயல்பாடுகள் பற்றி சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த சோதனை முறை வெற்றிகரமாக இருந்ததால் நவீன கருவிகள் சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

விமானங்கள் 'டாக்ஸி வே'யில் இருந்து நடைமேடைக்கு திரும்பும் போது 60 மீட்டர் தூரத்தில் இருந்து அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவி செயல்பட தொடங்கும். விமானம் நடைமேடைக்கு வருவதை தானியங்கி கருவி உறுதி செய்யும். விமானம் சரியான திசையில் இருந்து விலகி வலது அல்லது இடதுபுறம் திரும்பினால் கருவியில் அமைக்கப்பட்டுள்ள திரையில் டிஜிட்டல் முறையில் அம்புக்குறி மூலம் வழி காட்டப்படும்.

அதனை விமானி கவனித்து விமானத்தை இயக்க முடியும். விமானம் சரியாக நிறுத்தும் இடத்துக்கு வந்ததும் கருவியின் திரையில் 'ஸ்டாப்' என்ற எழுத்துக்களுடன் கூடிய சிவப்பு விளக்கு எரியும். இதை பார்த்து விமானி விமானத்தை நிறுத்தி விடுவார்.

இந்த நவீன புதியமுறை சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளதால் மோசமான வானிலை, பலத்த மழை, சூறைக்காற்று போன்ற நேரங்களிலும் விமானங்கள் எந்தவித சிரமமும் இன்றி நடைமேடையை சென்றடையும். இதனால் காலதாமதம் இல்லாத விமான சேவை கிடைக்கும்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள மற்ற நடைமேடைகளுக்கும் இந்த அதிநவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story