ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு


ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு
x
தினத்தந்தி 21 Aug 2023 7:19 AM GMT (Updated: 21 Aug 2023 8:49 AM GMT)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்கவும், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், அதனை தமிழக அரசே அகற்றும் எனவும், அதற்கான செலவுகளை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்ற நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் மேற்பார்வையில், சப்-கலெக்டர் தலைமையில் பல்வேறு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பணிகள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு லாரிகள் மூலம் ஆலையில் இருந்து பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் 10 லட்சத்து 65 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தது. இதுவரை அவற்றில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வாரத்திற்கு ஒருமுறை எவ்வளவு ஜிப்சங்கள் ஆலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. இதற்கிடையே ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது.

எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது. எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story