சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்; கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்; கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர், ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா (9). எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு மாடு திடீரென சிறுமியை கொம்பால் தூக்கி வீசியது. பின்னர் சிறுமியை மாடு விடாமல் குத்தி தரையில் அழுத்தியது.

ஒரு கட்டத்தில் ஒருவர் கட்டையால் மாட்டை அடித்து விரட்டினார். அதன்பிறகே மாட்டின் பிடியில் இருந்து சிறுமி தப்பினார். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். சிறுமியை மாடு தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி மாட்டின் உரிமையாளரான விவேக் (வயது 26) மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர் கொண்டு சென்றார். சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதத்தொகை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில்,

"சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்: கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள். பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்குழந்தை முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story