குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காததால் வெளியில் காத்திருந்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்


குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காததால் வெளியில் காத்திருந்த மாணவர்கள் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
x

விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் பள்ளியை திறக்காத தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள்மலர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. காலை 9 மணி ஆகியும் ஆசிரியர்கள் யாரும் வராததால் பள்ளி திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தன.

இதனால் நீண்ட நேரம் பள்ளிக்கு வெளியே காத்து நின்ற மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் யாரும் வராததாலும், பள்ளி திறக்கப்படாததாலும் பெரும் குழப்பமடைந்தனர். சிலர், பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பிச்சென்றனர். பின்னர் காலை 9.05 மணியளவில் தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து பள்ளியை தாமதமாக திறந்தனர். அதன் பிறகு வீடு திரும்பியிருந்த மாணவ-மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.

இந்த தகவல் புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகியது. உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் அறிவுரைப்படி விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு, தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் விளக்கத்தை கேட்டறிந்து எச்சரித்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளியை திறக்காத காரணத்திற்காகவும், குறித்த நேரத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்காத காரணத்திற்காகவும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்மலரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.


Next Story