சென்னையில் 30-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது


சென்னையில் 30-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
x

சென்னையில் வருகிற 30-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

துணை வேந்தர்கள் மாநாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17-ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால் முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே வருகிற 30-ந் தேதி இந்த மாநாடு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், மாநில கல்வி கொள்கையை வகுக்கக்கூடிய குழுவின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

தர உயர்வு ஆலோசனை

உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

சில இடங்களில் பாடத்திட்டங்களில் பிரச்சினை உள்ளது. தமிழ், ஆங்கிலம் மொழிப்படிப்பில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? என்பது பற்றி இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் முன்பு பேசப்படும். மொழிப்பாடங்கள் அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியாக, இருப்பது குறித்தும், அதை செயல்முறைபடுத்துவது குறித்தும் முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், நான் முதல்வன் திட்டத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும், என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் செயல்படுத்துவது தொடர்பாக துணை வேந்தர் மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story