மதுரவாயல் சிக்னலில் நின்றபோது மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; போலீஸ்காரர் பலி - டிரைவர் கைது


மதுரவாயல் சிக்னலில் நின்றபோது மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; போலீஸ்காரர் பலி - டிரைவர் கைது
x

மதுரவாயல் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் தறிகெட்டு வந்த டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.

சென்னை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுலா பீதின் (வயது 28). தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின். இவரது மனைவி ஜாஸ்மின் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அவரை சொந்த ஊரில் விட்டு விட்டு சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு ஜெய்னுலா பீதின் மோட்டார் சைக்கிளிள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ரேசன் கடை பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்த போது, சிக்னலில் காத்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் திடீரென பிரேக் பிடிக்காமல் தறிக்கெட்டு வந்த டேங்கர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஜெய்னுலா பீதின் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இறந்து போன ஜெய்னுலாபீதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவத்திற்கு காரணமான லாரி டிரைவர் கணேசன் (62) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story