மண்டைக்காடு கோவில்வெளி பிரகாரத்தில் கல்தூண்கள் அமைக்கும் பணி


மண்டைக்காடு கோவில்வெளி பிரகாரத்தில் கல்தூண்கள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

மண்டைக்காடு கோவில் வெளி பிரகாரத்தில் கல்தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி இந்த கோவிலின் கருவறைக்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் முழுமூச்சில் மரப்பணி செய்து வந்தனர். மேலும் மூலஸ்தான மேற்கூரைக்கான திருப்பணிகள் திருக்கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே வெளிச்சுற்று பிரகாரத்தில் கல்தூண்கள் நிறுவும் பணி நேற்று தொடங்கியது. அந்த வகையில் 9 அடி உயரத்தில் 14 கல்தூண்கள் நிறுவப்பட உள்ளது. இந்த பணியை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பணிகளை திருக்கோவிலின் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் உதவி ஆணையர் தங்கம், இணை ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், தேவசம் முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஸ்குமார், துளசிதர நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகிற தை மாதத்தில் கலஷாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story