மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை


மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை
x

மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், வன்னியர் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 37). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு சர்வேஷ் பிரணவன் (13), என்ற மகனும், யாழிசை (11), என்ற மகளும் உள்ளனர். இருவரும் கொளப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததால் உறவினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அம்பிகா கழுத்தில் பெல்ட்டால் இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தனஞ்செழியன் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த தனஞ்செழியன், அம்பிகா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கடந்த சில நாட்களாக அம்பிகா வேறு யாருடனோ செல்போனில் பேசிகொண்டு இருப்பதாக மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தனஞ்செழியன் மனைவியை பெல்ட்டால் அடித்து உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

அவர் இறந்த நிலையில் பயந்து போன தனஞ்செழியனும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story