குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவனை கொலை செய்த சக மாணவியின் தாயார் கைது


குளிர்பானத்தில் விஷம் கலந்து மாணவனை கொலை செய்த சக மாணவியின் தாயார் கைது
x

விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவனை கொலை செய்த சக மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ரேஷன்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பால மணிகண்டன்(வயது 13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாலமணிகண்டன், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு வந்துள்ளான். பின்னர், தனது தாயிடம், என்ன குளிர்பானம் கொடுத்தீங்க? அதை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக வருகிறது என பாலமணிகண்டன் கூறியுள்ளான்.

திடீர் வாந்தி

அதற்கு தாய் மாலதி, நான் ஒன்றும் கொடுக்கவில்லையே என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். இதனையடுத்து மாலதி தனது மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதனால் அதிர்ச்சி அடைந்த, மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர், காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

சக மாணவியின் தாயாரிடம் விசாரணை

இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தான். இதனைத்தொடர்ந்து போலீசார் மாணவியின் தாயாரை கைது செய்துள்ளது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story