ஊழியரை கண்டித்து ரேஷன் கடை முன் போராட்டம் நடத்திய பொதுமக்கள்


ஊழியரை கண்டித்து ரேஷன் கடை முன் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

ஊழியரை கண்டித்து ரேஷன் கடை முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட சிலுவைபுரம் பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர் முறையாக கடையை திறக்காமலும், பொதுமக்களுக்கு சரியாக பொருட்கள் வழங்காமலும் இருந்தார். இதனால் தினசரி பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று கடைக்கு வந்த ஊழியர் அங்கு காத்திருந்த பொதுமக்களை நிற்க வைத்து விட்டு அருகில் இருந்த மதுகடைக்கு சென்று மது குடித்தார். இதனை கண்ட பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் கவிதா தலைமையில் கடைமுன் குவிந்து ஊழியரை கண்டித்து கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த கிள்ளியூர் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி வேணுகோபால் ரேஷன் கடைக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு மது போதையில் வந்த ஊழியரை கண்டித்து திருப்பி அனுப்பி விட்டு மாற்று ஊழியரை வரவழைத்து கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story