கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்


கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்
x

மாமல்லபுரம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு அருகில் உள்ள குதிரைக்காரர் வீதி பகுதியில் வசிப்பவர் பத்மினி (வயது 60). அதே பகுதியில் சங்கு, மணி, துப்பட்டா, துணிப்பை இவைகளை சாலையோரம் போட்டு விற்பனை செய்து வந்தார். இவரது இளையமகன் முரளி (வயது 37), கஞ்சா போதைக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு முரளி தாய் பத்மினியிடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே மகன் கஞ்சா போதையில் இருந்ததால் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முரளி தாயை கண்மூடித்தனமாக தாக்கி வயிற்றில் மிதித்துள்ளான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர். அடிக்காதே வயிறு வலிக்கிறது என கண்ணீர் விட்டு கெஞ்சியுள்ளார்.

கஞ்சா போதை கண்ணை மறைத்ததால் தாய் என்றும் பாராமல் மீண்டும் அருகில் இருந்த கட்டையை எடுத்து பத்மினி தலையில் அடித்துள்ளான். வலி தாங்க முடியாமல் கதறிய கூச்சலிட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பத்மினி உயிரிழந்தார்.

மாமல்லபுரம் போலீசார் முரளி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அவர் தாய் இறந்தது கூட தெரியாத அளவிற்கு போதையுடன் அதே பகுதியில் பதுங்கி இருந்தார். போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story