துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது


துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறை

துலா உற்சவம்

கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டனர். பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டியபோது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே, காசிக்கு நிகராக மயிலாடுதுறை போற்றப்படுகிறது.

நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புஷ்கர தொட்டியில் போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாக புனித நீர் தெளிக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்திருந்தது. காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடினர்.

தீர்த்தவாரி

தொடர்ந்து அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனாகிய அய்யாறப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோவில் விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு பக்க கரைகளிலும் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வாக சிவ வைணவ தலங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவமாக திருக்கல்யாணம், தேரோட்டம், அமாவாசை தீர்த்தவாரி, கடைமுழுக்கு, முடவன் முழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனால் சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story