காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்


காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
x

காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் 40 கடைகள் கொண்டு இயங்கி வந்தது.

இந்த மார்க்கெட்டை புதிதாக அமைத்து மேம்படுத்தும் பணிக்கும், புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா, உயர்மின் கோபுர விளக்குகள் மற்றும் இருச்சக்கர வாகன நிறுத்தம் போன்ற நவீன வசதிகள் கொண்டு அமைப்பதற்கும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் மார்க்கெட் கட்டிடத்திற்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 27-ல் அமைந்துள்ள முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த பருவமழையின் போது சேதமடைந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக முருகன் குடியிருப்பு, வரதராஜன் குடியிருப்பு, தாட்டி தோப்பு, பல்லவர் குடியிருப்பு, அண்ணா நகர், கிருஷ்ணா நகர், செல்லியம்மன் நகர், எர்வாய், குளாம்பாக்கம் கிராமங்களில் வசிக்கும் 1,500 குடியிருப்புகளில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் 2 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள், கல்லூரி, மாணவ- மாணவியர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மகளிர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேற்படி அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதி 2022-23-ன் கீழ் ரூ.2 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முருகன் குடியிருப்பு மற்றும் தாட்டித்தோப்பு பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தல் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2022-23 கீழ் ரூ.16 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் காஞ்சீபுரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெளிக்கொணர்வு முறையில் பணியாளர்கள் மற்றும் வாகனங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிமுகப்படுத்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி உறுப்பினர் ஷாலினி வேலு, காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர பொறியாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் தனியார் தொழிற்சாலை நிதி பங்களிப்புடன் சுமார் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சேகரிப்பு நிலையத்தை தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 2½ கோடி மதிப்பீட்டில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுலா மாளிகை அருகே புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தையும், வருவாய் ஆர்.டி.ஓ. குடியிருப்பையும் அமைச்சர் தாமோ அன்பரசன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர்தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story