தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

தி.மு.க.வை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசு திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசிடம் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு இன்னும் நிறைவேறாமல் உள்ளதே தவிர மத்திய அரசு சொல்கிறபோது நாங்கள் எதற்கு தடையாக இருக்க முடியும், அது முழுக்க முழுக்க ஏற்புடையதல்ல.

ஆதி திராவிடமக்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இந்தியாவுக்கே முன்மாதிரியாக அறிவித்தார். தற்போது பிரதமர் வீடு கட்டும் திட்டம் எனப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்கீடு 30 சதவீதம் மட்டும்தான். 70 சதவீதம் மாநில அரசு கொடுக்கிறது. இதற்கு நாங்கள் ஒத்துழைக்காமல் இருக்கிறோமா?. 2 பங்கு நாங்கள் தருகிறோம், ஒரு பங்குதான் அவர்கள் தருகிறார்கள். பிரதமர் பெயரை வைத்துள்ளனர்.

இன்னும் 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆள் இல்லை. முதல் தலைமுறை பெரியார், 2-ம் தலைமுறை அண்ணா, 3-ம் தலைமுறை கருணாநிதி, 4-ம் தலைமுறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் 50 ஆண்டுகள் நிலைநிறுத்த உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story