திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி - திருமழிசை பேரூராட்சியை கைப்பற்றியது


திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி - திருமழிசை பேரூராட்சியை கைப்பற்றியது
x

திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திருமழிசை பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.

திருவள்ளூர்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், பா.ம.க மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தி.மு.க.வுக்கு 1 வார்டு கவுன்சிலர் உதவியும், அ.தி.மு.க.வுக்கு 2 வார்டு கவுன்சிலர்கள் உதவியும் தேவைபட்டது.

இந்தநிலையில் பா.ம.க. மற்றும் சுயேட்சை வார்டு ஆகிய 2 கவுன்சிலர்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து இருந்ததால் அ.தி.மு.க. பலம் 8 ஆக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 4-ந் தேதி தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் தி.மு.க.வுக்கு 7 ஓட்டுக்களும், அ.தி.மு.க.வுக்கு 6 ஓட்டுகளும் போடப்பட்டிருந்தது. ஆனால் 2 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக போடப்பட்டிருந்ததால் பேரூராட்சித் தலைவராக 7 ஓட்டுக்களை பெற்ற தி.மு.க. வேட்பாளர் வடிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., சுயேச்சை ஆகிய கவுன்சிலர்கள் இரண்டு முறை தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் பா.ம.க. கவுன்சிலர் ராஜேஷ், சுயேட்சை கவுன்சிலர் லதா ஆகிய 2 கவுன்சிலர்களும் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

இதனால் திருமழிசை பேரூராட்சியில் தி.மு.க.வின் பலம் 7 லிருந்து 9 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் திருமழிசை பேரூராட்சியில் துணைத் தலைவர் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் சேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கி.ரவி ஆகியோர் தேர்தலை நடத்தினர். இந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் 8-வது வார்டு கவுன்சிலர் மகாதேவன், அ.தி.மு.க. சார்பில் 6-வது வார்டு கவுன்சிலர் வேணுகோபால் ஆகியோர் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் பங்கேற்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் மகாதேவன் 15 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் 5 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதனால் திருமழிசை பேரூராட்சியில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பேரூராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்ற மகாதேவனுக்கு தி.மு.க. நகர செயலாளர் முனுசாமி, பேரூராட்சி தலைவர் வடிவேல் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story