திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; மனைவி பலி - ரெயில்வே ஊழியரின் கண் எதிரே சோகம்


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; மனைவி பலி - ரெயில்வே ஊழியரின் கண் எதிரே சோகம்
x

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ரெயில்வே ஊழியரின் கண் எதிரே மனைவி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி சங்கீதாவுடன் திருத்தணி பஜார் வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிள் பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சங்கீதாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆந்திர பதிவு எண் கொண்ட டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த அத்திமஞ்சரி பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்றுமுன்தினம் காரில் மனைவி ஹேமலதா மற்றும் குழந்தையுடன் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளுவரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நெடும்பரம் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென நிறுத்தியதால், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த வேல்முருகன், ஹேமலதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story