திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; வாலிபர் பலி - படுகாயமடைந்த தாய்க்கு தீவிர சிகிச்சை


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; வாலிபர் பலி - படுகாயமடைந்த தாய்க்கு தீவிர சிகிச்சை
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கவரை தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி சாகர் தேவி (வயது 41). விஷ்ணு காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 19). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மனோஜ்குமார் மற்றும் அவரது தாயார் சாகர் தேவி பேரம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து, அவர்கள் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த பதிவு எண் இல்லாத டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் அந்த டிராக்டர் அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்களையும் இடித்துவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதில் நிலைத்தடுமாறி மனோஜ் குமாரும், அவரது தாயார் சாகர் தேவியும், கீழே விழுந்தனர். இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த மனோஜ்குமார், சாகர்தேவி ஆகிய 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் மனோஜ் குமார் பரிதாபமாக இறந்து போனார்.

மேலும் இந்த சம்பவத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த டில்லி பாபு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story