கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்: பனை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்


கோவிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்: பனை மரத்தில் கார் மோதி விபத்து - ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்
x

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது பனை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயல் தாலுகா, நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தனது குடும்பத்தினருடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஒரு காரில் புறப்பட்டார். இந்த காரை சரவணன் (வயது 39) என்பவர் ஓட்டினார். இவர்கள் முதலில் காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர். இந்த கார் ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா குப்பம் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நசுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிந்தாமணி (70) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுப்பிரமணியம் (52), சித்ரா (47), கருப்பையா (40), சிதம்பரம் (25), கணேசன் (20), குழந்தைவேலு (21), சக்திவேல் (12), செல்வ ஸ்ரீநாத் (18) மற்றும் கார் டிரைவர் சரவணன் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஆர்.கே. பேட்டை போலீசார் விரைந்து காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியது தெரிய வந்தது.


Next Story