மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி


மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
x

பள்ளிப்பட்டு அருகே மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு தாலுகா, சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). விவசாயி. இவரது மனைவி பிரபாவதி (52). இவர்களுக்கு சுந்தரம் (27) என்ற மகன் இருக்கிறான். நேற்று ராமமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் தனது மாமியார் வீடான பள்ளிப்பட்டு தாலுகா கிருஷ்ணமராஜ குப்பம் கிராமத்திற்கு சென்றார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் வடகுப்பம் பால் டைரி அருகே இவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோனாட்டம் பேட்டை கிராமத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைபோல் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள கொட்டாகையில் நேற்று ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் திருவாலங்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 70 வயது இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து திருவாலங்காடு கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story