திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்


திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது சரமாரி தாக்குதல்
x

இளைஞர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலை கண்டு பஸ்சில் இருந்த பெண் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண் ஒருவரை, சற்று தூரம் தள்ளி பஸ்சை நிறுத்தி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணுக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் அந்த பஸ் துவாக்குடி சென்றுவிட்டு, மீண்டும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சூளைக்கரை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 5 பேர் அந்த பஸ்சில் ஏறினர். அவர்கள், எப்படி ஒரு பெண்ணை திட்டலாம்? என்று கேட்டு, பஸ் கண்டக்டர் மாத்தூரை சேர்ந்த மூக்கையனை சரமாரியாக தாக்கினர்.

இளைஞர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலை கண்டு பஸ்சில் இருந்த பெண் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த தாக்குதல் காட்சி பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து மூக்கையன் கொடுத்த புகாரின்பேரில், தாக்குதல் நடத்திய வாலிபர்களை காந்தி மார்க்கெட் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story