திருச்சி: கத்தியை காட்டி மிரட்டி பெண் பலாத்காரம்; ரவுடி மீது வழக்கு


திருச்சி: கத்தியை காட்டி மிரட்டி பெண் பலாத்காரம்; ரவுடி மீது வழக்கு
x

பாதிக்கப்பட்ட அந்த பெண் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாங்கரையை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் திருச்சியை சேர்ந்த 33 வயது பெண் வீடு கட்ட கோரி தனது தந்தை மூலம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வீடு கட்டி தராமல் ஏமாற்றி வந்தார்.

இதையடுத்து, அவரிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்துவிட்டார். இது பற்றி அந்த பெண் தன்னுடன் வேலை செய்து வரும் ஒருவரிடம் தெரிவித்தார். இதை கேட்ட அவர் தனது நண்பர் சமயபுரம் அருகே வெங்கங்குடி சித்தார்த் என்கிற பிரதீபனிடம் தெரிவித்து, பணத்தை திரும்ப வாங்கி தருகிறேன் என்று கூறி அவரை அறிமுகப்படுத்தினார்.

சித்தார்த் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இதனைத் தொடர்ந்து, சித்தார்த்தும், அந்த பெண்ணும் அடிக்கடி தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து பேசி வந்தனர். மேலும் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதை அறிந்த சித்தார்த் அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்ட சித்தார்த் அந்த பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது மட்டுமல்லாமல் உனது கணவருக்கும் அனுப்புவேன் என்று மிரட்டி 4 பவுன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சித்தார்த் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story