திண்டுக்கல்: 9 மாத கைக்குழந்தை விபத்தில் உயிரிழந்த வழக்கு - நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


திண்டுக்கல்: 9 மாத கைக்குழந்தை விபத்தில் உயிரிழந்த வழக்கு - நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

வேடசந்தூர் அருகே அரசு பஸ் மோதி 9 மாத கைக்குழந்தை உயிரிழந்த வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள பாகாநத்தம் கிராமம் தோப்பூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காளிப்பன், மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை சர்மிளா உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு பழனியம்மாள் தனது கைக்குழந்தையுடன் வேடசந்தூர் அருகே கோவிலூரில் நின்று கொண்டு இருந்தபோது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் சப்பவ இடத்திலேயே கைக்குழந்தை சர்மிளா உயிரிழந்தது. மேலும் பழனியம்மாள் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த விபத்தில் நஷ்ட ஈடு கேட்டு பழனியம்மாளின் கணவர் காளியப்பன், வக்கீல் கார்த்திகேயன் மூலம் வேடசந்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, இந்த விபத்தில் மதுரை அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக, வட்டியுடன் சேர்த்து ரூ. 8 லட்சத்து 58 ஆயிரத்து 711 வழங்க கடந்த 2018 ஆண்டு உத்திர விட்டார்.

ஆனால் இதுவரை அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேடசந்தூர் சார்பு நீதிபதி சரவணக்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி வேடசந்தூர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.


Next Story