விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் - மத்திய இணைமந்திரி எல்.முருகன்


விஜயகாந்த் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் - மத்திய இணைமந்திரி  எல்.முருகன்
x

விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சென்னை,

உடல் நலக்குறைவு காரணமாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும், அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்றும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக அவருடைய மனைவி பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார். இதனிடையே பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக மத்திய இணைமந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழக திரைப்பட முன்னணி நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அண்ணன் அவர்கள் சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று அதில் மத்திய இணைமந்திரி எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.


Next Story