பள்ளிப்பட்டு பகுதியில் சேதமான தரைப்பாலங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை


பள்ளிப்பட்டு பகுதியில் சேதமான தரைப்பாலங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
x

பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமான தரைப்பாலங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் இரு தினங்களுக்கு முன் இரவில் தொடங்கிய பலத்த மழை விடிய, விடிய பெய்ததால் அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடி கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. எனவே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே பல இடங்களில் உள்ள தரை பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

குறிப்பாக சானாகுப்பம் கிராமம் அருகே உள்ள ஆற்றில் தரைபாலம் சேதமடைந்ததால் இந்த கிராமம் துண்டிக்கப்பட்டது.

அதேபோல் இருதலைவாரி பட்டடை கிராமத்திலிருந்து வெங்கடாஜு குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள லவா ஆற்றில் குறுக்கே இருந்த தரை பாலம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த கிராம மக்கள் அவதிப்பட்டனர். அதேபோல் ஞானம்மாள் பட்டடை கிராமத்திலிருந்து சாமந்த வாடா கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்த தரைபாலமும் முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் இந்த இரு கிராம மக்களும் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மேற்கண்ட இடங்களில் பழுதடைந்த தரை பாலங்களை சீரமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story