வைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கோப்புப்படம் 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 66.65 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன 1,2,மற்றும் 3 பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து கடந்த மாதம் 23 - ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story