தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் - தலைமை தேர்தல் ஆணையர்


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் - தலைமை தேர்தல் ஆணையர்
x

சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

சென்னை,

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22 - 29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர்.தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். அவர்களிடம் நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம். பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

வாக்குச்சாவடி மையங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் அளிக்க மொபை ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கலாம். தேர்தலில் வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

ஜனநாயகம், வெளிப்படையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி-விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடிகளில் தேவையான நடவடிக்கைகள் செய்து தரப்படும்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணப்பட்டுவாடா செய்தால் அதை கண்காணிக்கும் வசதி உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கப்பட்ட சின்னமே இந்த முறையும் வழங்கப்படும் என உறுதி அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story