சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?


சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?
x

கோப்புப்படம்

சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை,

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் உள்ளிட்ட 30 சுங்கச்சாவடிகளில் வழக்கமாக ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் சராசரியாக உயர்த்தப்படும்.

அதேபோல், செப்டம்பர் 1-ந்தேதி முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடியில் உள்ள சுமார் 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவது வழக்கம்.

இதற்கிடையே சென்னை உள்ளிட்ட 34 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது திடீரென இந்த கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, 'எங்களுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் நேற்று முதல் உயர்த்த வேண்டிய சுங்கசாவடிகளின் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பழைய கட்டணத்திலேயே வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

எதற்காக கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்படுமா..? என்பது குறித்து எல்லாம் இப்போது எதுவும் கூற இயலாது. அதுகுறித்து தலைமை அலுவலகம் தான் முடிவு செய்து அறிவிப்பார்கள்' என்றனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அன்பழகன் கூறும் போது, 'சுங்க கட்டணம் நேற்று உயரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சுங்க வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்தால் வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களும் பாதிப்படைகிறார்கள்.

வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தி வந்தாலும் சுங்கவரி என்னும் பெயரில் இரட்டை வரியாக விதிப்பது இந்திய மோட்டார் வாகன விதிகளுக்கு எதிரானது. ஆகையால், பயன்பாட்டில் இல்லாத சுங்கச் சாவடிகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும். மாநில அரசும் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து சுங்க வரி கொள்ளையிலிருந்து மக்களை காத்திட வேண்டும்' என்றார்.


Next Story